ஆதியாகமம் : படைப்பு முதல் வீழ்ச்சி வரை
நீங்கள் கேட்பவை
டாக்டர் ஜே. வெர்னான் மெக்கீயுடன் வேதாகமம் முழுவதும்
நூல்: ஆதியாகமம்
பகுதி: ஆதியாகமம் 1:26—2:3
நிகழ்ச்சி: #0015
வாசியுங்கள்
0015 / 1781
நேற்றும் இன்றும் என்றும் மாறாத ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களை அன்போடு வாழ்த்துகிறோம். இந்த நாட்களில் நாம் ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தை கற்று வருகிறோம்.
முந்தைய நிகழ்ச்சியில், ஆதியாகமம் முதலாம் அதிகாரம் முதலாம் வசனத்திற்கும் இரண்டாம் வசனத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்ட பேரழிவை குறித்தும். அதற்குப்பின் தேவன் எவ்வாறு ஒழுங்கின்மையும் வெறுமையும் இருந்த உலகத்தை சரி செய்தார் என்றும் பார்த்தோம். இரண்டாம் வசனம் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் உலகத்தின் வெவ்வேறு காரியங்களை தேவன் எவ்வாறு படைத்தார் என்று கற்றுக் கொண்டோம். ஒவ்வொரு நாளின் படைப்பிற்கு பின்னரும் அது நல்லது என்று கண்டார் என்றும் வாசித்தோம். மனிதனுக்காக பூமியை உருவாக்கிய தேவன் பூமியில் படைத்த ஒவ்வொன்றையும் நல்லது என்று கண்டார். தேவன் நல்லவர் என்பது அவர் படைப்பு முதல் அவரைப் பற்றி நாம் அறிந்து கொள்ளக்கூடிய ஒரு பெரிய உண்மை. நமக்காக அவர் செய்யும் எதுவுமே நல்லதாகவே இருக்கும். எனவே எல்லா சூழ்நிலைகளிலும் நாம் அவரையே நம்பலாம்.
இன்று ஆதியாகமம் முதலாம் அதிகாரம் 26 ஆம் வசனம் முதல் 31 ஆம் வசனம் வரை கற்றுக் கொள்வோம்.
ஆதியாகமம் 1:26
‘பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். ‘
……………………………
இந்த வசனத்தை நாம் வாசிக்கும் பொழுது நமக்கு எழும் முதல் கேள்வி: மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான்? அடுத்த அத்தியாயம் அதை நமக்கு தெளிவாக சொல்லுகிறது. நாம் வாசித்த இந்த வசனத்தில் “அவர்கள் ஆளக்கடவர்கள் என்றார்.” என்று நாம் பார்ப்பது. கடவுள் மனிதனுக்கு பூமியின் மீது ஆளுகையின் உரிமையை கொடுக்கிறார், இப்படி கூறுவதால் மனிதனை கடவுள் ஏதேன் தோட்டத்திற்கு ஒரு வகையான மகிமைப்படுத்தப்பட்ட தோட்டக்காரனாக ஆக்கினார் என்று நாம் கூறமுடியாது. இதைவிட மிகப்பெரிய அதிகாரம் ஆதாமுக்கு கொடுக்கப்பட்டது.. கடவுள் அவனுக்குக் கொடுத்த இந்தப் படைப்புடன் தொடர்புடைய சில விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று கடவுள் அவனிடம் கூறுகிறார் என்பதை சிறிது நேரம் கழித்து நாம் பார்ப்போம்.
மற்றும் ஒரு காரியத்தையும் இந்த வசனத்தில் நாம் கவனிக்க வேண்டும். இந்த படைப்பின் சரித்திரத்தில், இந்த ஒரு இடத்தில் தான் என்று கூறி இருக்கிறார். கிறிஸ்தவ இறையியலின் படி திருத்துவதை, அதாவது பிதா குமாரன் பரிசுத்த ஆவியானவரை இது குறிக்கிறது என்று நாம் சுவாசிக்கலாம். தேவன் பரலோக நீதிமன்றத்துடன் கலந்து ஆலோசித்திருக்கலாம் என்று இதை ஒரு யூத விளக்கம் கூறுகிறது. மனிதனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பகுத்தறிவு படைப்பாற்றல் தார்மீக விழிப்புணர்வு உறவுத்திறன் மற்றும் கடவுளின் தன்மையை பிரதிபலிக்கும் ஆன்மீக ஆற்றல் போன்ற குணங்களை அவருடைய சாயல் நமக்கு வழங்குகிறது என்று ஒருவர் கூறுகிறார்.
ஆதாமின் வம்ச வரலாறை குறிப்பிடும் பொழுதும், ஆதியாகமம் 5:1ல்
‘ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
………………………..
‘ என்று வாசிக்கிறோம்.
ஆதியாகமம் 1:27
‘தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். ‘
…………………………..
இங்கே மனிதனின் படைப்பை குறித்து சுருக்கமாக சொல்லப்பட்டிருப்பதை பார்க்கிறோம். தேவனுடைய சிருஷ்டிப்பை குறித்து நாம் பார்க்கும் பொழுது இங்கே மூன்றாவது முறையாக “பாரா” என்ற எபிரேய சொல் பயன்படுத்தப்பட்டு இருப்பதை பார்க்கிறோம்; இது “ஏதுமில்லாததிலிருந்து படைக்கப்பட்டதை குறிக்கிறது”. எனவே, மனிதன் படைக்கப்பட்டான் என்பதை நாம் காண்கிறோம்; அவன் புதிய ஒரு படைப்பு. “பாரா” என்பது ஆதி 1:1ல் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் என்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தை. முதலாவது வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார் இப்பொழுது மனித உயிரை அவர் சிருஷ்டிக்கிறார்.:
“தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், .” கடவுள் மனிதனின் படைப்பின் விவரங்களை அடுத்த அதிகாரத்தில் நமக்கு இன்னும் சர்று விபரமாகக் கொடுத்திருக்கிறார், என்றாலும் கடவுள் பிரபஞ்சத்தின் படைப்பு பற்றி நிறைய விவரங்களை நமக்கு கொடுக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “ஆதியிலே தேவன் வா னத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” என்பதே அவர் நமக்கு அளித்தமுழுமையான செய்தி, அதைப் பற்றி நாம் அறியக்கூடியது பொதுவானதே. அவர் விவரங்களை எழுதிக் கொடுத்திருக்கலாம், ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. அவரது படைப்பின் ஒரே செயலை மட்டும் அவர் அதிக விவரமாகச் செல்வார், அது மனிதனின் படைப்பே. ஏன் என்று அறியுமா? பரிசுத்த வேதம் மனிதனுக்காக எழுதப்பட்ட பதிவு என்பதால்; கடவுள் அவனது தோற்றம் பற்றி மனிதன் அறிந்துகொள்ள விரும்புகிறார். தேவன் மனிதனைப் பார்த்து உன் சொந்த படைப்பை பற்றி நீ கவனித்து அறிந்து கொள் பிரபஞ்சத்தின் படைப்பை குறித்து நீ யூகித்துக் கொண்டு இருக்க வேண்டாம் என்று சொல்வது போல இருக்கிறது.
தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார். இது கடவுளின் வார்த்தையின் சிறந்த அறிக்கைகளில் ஒன்று என்று நாம் கூறலாம்.. இதைவிட அற்புதமான எதையும் நாம் கற்பனை செய்ய முடியாது. இதன் பொருள் என்ன?, மனுஷன் கடவுளைப் போலவே ஒரு திரித்துவமாக இருக்கிறான். உடனடியாக யாராவது, “ஓ, நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று எனக்கு தெரியும். மனுஷன் உடல், மனம் மற்றும் ஆன்மீக ரீதியாக ஒரு உயிரினம்” என்று சொல்லலாம். ஆம், அது உண்மை தான்.. பவுல், 1 தெசலோனிக்கேயர் 5:23 இல், அந்தக் கருத்தையே சொல்கிறார். கவனியுங்கள் வாசிக்கிறேன்.
1 தெசலோனிக்கேயர் 5:23
‘சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. ‘
……………………………….
” ஆம் இது உண்மையானாலும், அடுத்த அதிகாரத்தில் நாம் பார்க்கும்போது, இது அதைவிட அதிகமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். மனிதன் விலையேறப்பெற்றவன் என்று கூறலாம்., மனிதன் தனிப்பட்ட பண்புடையவனாக சுய மனசாட்சியுடையவனாக சுய முடிவுகளை எடுக்கக் கூடியவனாக இருக்கிறான் என்ற சத்தியத்தை இது விளக்குகிறது. அவன் சுய சித்தம் உடையவனாய் இருக்கிறான். இதுவே மனிதகுலத்தின் தனித்துவமான அம்சமாகத் தெரிகிறது. கடவுள் தன்னுடைய சாயலின்படி மனுஷனைப் படைத்தார் என்பதற்கு இது தான் அர்த்தம் என்று நான் நம்புகிறேன்.
அடுத்ததாக இந்த வசனத்தில் ஆணும் பெண்ணும் ஆக அவர்களை சிருஷ்டித்தார் என்று வாசிக்கிறோம். இந்த வசனத்தில் ஆண் எப்படி படைக்கப்பட்டான் பெண் எப்படி படைக்கப்பட்டாள் என்ற விபரங்கள் நமக்கு கொடுக்கப்படவில்லை. இரண்டாம் அதிகாரத்திற்கு நாம் வரும் பொழுதுதான், இந்த விபரங்களை நாம் பார்க்க முடிகிறது.இந்த காரணத்திற்காகவே தேவன் இந்த அண்ட சராசரங்களின் படைப்பை பற்றிய விளக்கத்தையும் நமக்கு கொடுக்க விரும்பவில்லை. அப்படி கொடுத்திருந்தால் அவர் இந்த அதிகாரத்தலோ அடுத்த அதிகாரத்திலோ அதைக் குறித்தும் சொல்லியிருப்பார். ஆனால் அவர் சிருஷ்டித்தார் என்பதைத் தவிர வேறு விளக்கத்தை நமக்கு தரவில்லை. இது நம்மை ஏபிரேயர் 11-ஆம் அத்தியாயத்தில் காணப்படும் மிக முக்கியமான சத்தியத்திற்கு நேராக கொண்டு செல்கிறது:
கவனியுங்கள் வாசிக்கிறேன். எபிரெயர் 11:3
‘விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். ‘
………………………………
இன்று நாம் காணும் பொருட்கள், முன்பு ஒருக்காலும் இருந்திராத பொருட்களிலிருந்து உருவாக்கப்பட்டவை. அதாவது ஒன்றும் இல்லாமையிலிருந்து தேவன் உண்டாக்கினார் என்று விளக்குகிறது. இதைத்தான் EX Nihilo என்று கூறப்படுகிறது. இதைக் குறித்து எனக்கு விளக்கமாக சொல்லுங்கள் என்று ஒருவேளை நீங்கள் கேட்கலாம் ஆனால். அதை விளக்க முடியாது என்பதுதான் அதற்கான பதில். பரிணாம கோட்பாடும் இதை உங்களுக்கு விளக்க முடியாது. பரிணாமவாதம் ஒன்றுமில்லாததிலிருந்து எப்படி ஏதோ ஒன்று உருவானது என்பதற்கான கேள்விக்கு ஒருபோதும் பதிலளிக்கவில்லை. அது எப்போதும் ஒரு சிறிய அமீபா, அல்லது குப்பைக்தொட்டி, அல்லது சிறிய கடல் பாசி, அல்லது மரத்தில் இருக்கும் ஒரு விலங்கிலிருந்து என்று தொடங்குகிறது. மனிதனின் எண்ணத்தின் படி, – எதையும் துவங்குவதற்கு ஏதாவது ஒன்று தேவையாயிருக்கிறது, ஆனால் வேதம் ஒன்றுமில்லாததிலிருந்து தொடங்குகிறது. தேவன் சிருஷ்டித்தார்! இதுவே இந்த அத்தியாயத்தின் மிகப்பெரிய வெளிப்பாடு…..
தொடர்ந்து ஆதியாகமம் 1:28 பாருங்கள்
‘பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். ‘
இங்கு நாம் காண்கிறது, தேவன் இந்த சிருஷ்டியினருக்கு அதாவது மனிதனுக்கு ஏதோ ஒரு அசாதாரணமானகாரியத்தை கொடுத்திருக்கிறார். முதலாவதாக அவர் மனுஷனிடம், “நீங்கள் பலுகிப் பெருகி,, ” என்று சொல்கிறார். பெண்ணை படைக்கும்போது அவர் இதை மீண்டும் சொல்வதை பார்க்கலாம். தேவனேபாலுறவை உண்டாக்கினார் . ஆனால் நம் தலைமுறை இதை ஒரு புதிய கண்டுபிடிப்பாக நினைப்பது மிகவும் சுவாரஸ்யமானது. தேவன் இதை மிகத் தொடக்கத்திலேயே இங்கு குறிப்பிடுகிறார். உண்மையில், மனுஷகுலத்தை இந்தப் பிரபஞ்சத்தில் கொண்டுவருவதற்காக தேவன் பயன்படுத்திய நான்கு முறைகள் இருக்கின்றன. முதலாவது நேரடி படைப்பு, அதன் மூலம் ஆதாம் உண்டாக்கப்பட்டான். இரண்டாவது மறைமுக படைப்பு, அதன் மூலம் ஏவாளும் உண்டானாள். மூன்றாவது கன்னி பிறப்பு, அதன் மூலம் இயேசு கிறிஸ்து மனுஷகுடும்பத்தில் வந்தார். நான்காவது முறை இயல்பான பிறப்பு, இந்த முறையில் தான் காயின் ஆபேல் பிறந்தார்கள். இவ்வாறே இன்றும் மனித சமுதாயம் வளர்ந்து பெருகி வருகிறது. குடும்பம் சமுதாயம் இவை எல்லாமே தேவனுடைய அற்புதமான திட்டம்.
தேவன் சிருஷ்டித்த இயல்பான பிறப்பை முறையை தேவன் எண்ணியிருந்த அளவை விட கீழான நிலைமைக்கு நாம் இறக்கியிருக்கிறோம் . தேவன் மனுஷனை பெருக்குவதற்காக இதைப் படைத்தார்.. இது ஒரு அற்புதமான, மகிமையான சத்தியம், ஆனால் அதை இன்று மனிதன் செய்து கொண்டிருப்பது போல கசப்பான, அசுத்தமான, கீழ்தரமான பொருளாக ஆக்கக் கூடாது. மக்கள் கசப்பான, அசுத்தமான புத்தகங்களை எழுதி அதை இலக்கியம் என்று அழைக்கிறார்கள்; அசுத்தமான, கசப்பான பொருட்களை உருவாக்கி அதை கலை என்று சொல்கிறார்கள். சில விமர்சகர்கள் இதற்கு எதிராக இன்று பேசத் தொடங்கியிருக்கிறார்கள், அதற்காக கர்த்தரைத் துதிக்க வேண்டும். நீண்ட காலமாக நாம் வாதாடி வருவது போல கலை என்று அழைக்கப்படும் பெரும்பகுதி வெறுமனே வெறுப்பைத் தூண்டுவது, அல்லது அருவருப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது, உண்மையில் அது கலை அல்ல. இந்த காரியங்கள் ஆவிக்குரிய காரியம் அல்ல, அது வெறும் பணத்திற்காக செய்யப்படுகிறது. தேவன் மேன்மையாக கண்ட கணவன் மனைவி உறவை மனிதன் அவமதிக்கக் கூடாது.
மேலும் பூமியை நிரப்பி என்று சொல்லும் பொழுது மனிதன் குடும்பங்களையும் உறவுகளையும் கொண்டவனாய் மட்டுமல்ல பூமியின் எல்லா இடங்களிலேயும் பறந்து விரிந்து சென்று வாழ வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம்.
தேவன் மனிதனை தமது சாயலிலே படைத்தார். தேவன் மனிதனை தனித்தன்மையுடன் படைத்து, அவனுக்கு அழிவற்ற ஆன்மாவை கொடுத்திருக்கிறார், மனுஷனுக்கு சுய-உணர்வு இருக்கிறது, அவனுக்கு சுதந்திரமாக எதையும் தெரிந்தெடுக்கும் சக்தி இருக்கிறது, எனவே அவனுக்கு தனித்துவமான தார்மீக பொறுப்பும் இருக்கிறது. மனிதன் தேவ சாயலாய் இருக்கிறான்.
“பழகி பெருகி பூமியை நிரப்புங்கள் என்று.” தேவன் மனிதனிடம் அவர்கள் பிள்ளைகளை பெற்றெடுத்து பூமியை நிரப்ப வேண்டும் என்ற ஒரு பொறுப்பை கொடுத்திருக்கிறார். அவர் “நிரப்பு” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்ப்பதை கவனிக்கவேண்டும். இங்கே நிரப்பு என்று சொல்லும் பொழுது மீண்டும் நிறைவாக்கு இந்த அர்த்தத்தில் வருகிறது. இது சுவாரஸ்யமான ஒரு சொல், இந்தப் பூமி இதற்கு முன்பு வேறு சிருஷ்டிகள் வாழும் இடமாக இருந்தது என்பதைக் குறிக்கிறது போல் தோன்றுகிறது. அந்த சிருஷ்டிகள் எவைகளாக இருந்தாலும், மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே அவை அழிந்துவிட்டன.
இந்த வசனத்தில் தேவன் மனுஷனிடம் பூமியை “ஆண்டுகொள்ளுங்கள் ” என்றும் கூறுகிறார். இது, என் அனுமானத்தின்படி, நம் காலத்தில் கற்பித்தல் மற்றும் அறிவியல் ஆய்வின் அடிப்படை என்று கூறலாம். ஒரு நீதிமொழி இவ்வாறு கூறுகிறது: நீதி. 25:2
‘காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. ‘
………………………………..
தேவன் வைரங்களை பூமியின் அடியில் மறைத்து வைத்திருக்கிறார். மேலும் கடவுள் பொக்கிஷங்களை மனிதன் தோண்ட வேண்டிய இடத்திலே வைக்கிறார். இன்று அறிவைப் பற்றியும் இதுவே உண்மை என்று நாம் நம்பலாம் .கடவுளின் வார்த்தையை படிப்பது பற்றியும் அது உண்மை என்று சொல்லலாம். சோதனை குழாய் மற்றும் நுண்ணோக்கியை பயன்படுத்த ஆய்வகத்திற்கு உள்ளே செல்ல வேண்டும் என்று கடவுள் விரும்புகிறார். ஆனால் துர்அதிர்ஷ்டவசமாக மனிதன் ஒரு அணுகுண்டை கண்டுபிடித்து மனித குல அழிவிற்கு வழிவகை செய்து விட்டான்.
மேலும் ”ஆண்டு கொள்ளுங்கள்” என்பது மனிதனுக்கு கடவுள் கொடுத்த அறிவுறுத்தல். ஆதாம் புல்லை வெட்டுவதற்கு ஒரு தோட்டக்காரன் மட்டுமல்ல. மனிதன் இந்த பூமியை ஆட்சிசெய்ய படைக்கப்பட்டிருக்கிறான். நம் வீடுகளிலே ஏர் கண்டிஷனை நாம் கட்டுப்படுத்துவது போல ஆதாமும் வானிலையை கட்டுப்படுத்த முடிந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவன் இந்த பூமியை ஆட்சி செய்தான். இதைத்தான் நாம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் காண்கிறோம். அவர் இந்த பூமியில் இருந்த பொழுது இயற்கையின் மீது அவருக்கு கட்டுப்பாடு இருந்தது. அவர் ஒரு புயலைப் பார்த்து அமைதியாக இரு என்று சொல்ல முடிந்தது. ஐந்து அப்பங்கள் மற்றும் இரண்டு மீன்களால் அவர் ஒரு பெரிய கூட்டத்திற்கு உணவளிக்க முடிந்தது. ஆதாம் பாவம் செய்து வீழ்ச்சி அடையும் வரை இதை எல்லாம் செய்திருக்க முடியும் என்பது என் கருத்து. ஆனால் அவன் பாவத்தில் விழுந்த பொழுது கடவுள் அவனுக்கு கொடுத்த ஆதிக்கத்தை, அல்லது ஆழுமையை ஆதாம் இழந்து போனான்.
ஆதியாகமம் 1:29 பாருங்கள்
‘பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது; ‘
………………………………
இந்த வசனத்தை நாம் வாசிக்கும் பொழுது, முதலில் மனுஷன் சைவ உணவு மட்டுமேசாப்பிடுகிறவர்களாய் இருந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், நோவாவின் காலத்தில் வந்த பெரு வெள்ளத்திற்கு பின்னரே மனிதன் அசைவ உணவை எடுத்துக் கொண்டான் என்று நாம் நம்பலாம்.
ஆதியாகமம் 1:30-31
‘பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.’
…………………………
இங்கே பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாக கொடுத்தேன் என்று தேவன் கூறுகிறார். அதாவது கடவுள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தாவர அடிப்படையிலான உணவை வழங்கியிருக்கிறார். தேவன் படைத்தவைகள் விதை தரும் தாவரங்களும் விதையுடன் கூடிய பழங்களும்- அதாவது இனப்பெருக்கம் செய்வது இதில் இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே தொடர்ந்து இயற்கையாக மனிதனுக்கு உணவு கொடுக்கும் ஒரு திட்டத்தை தேவன் உருவாக்கி இருக்கிறார் என்பதை நமக்கு தெளிவாகிறது.
இந்த வசனங்களோடு முதல் அதிகாரம் நிறைவடைகிறது.
இந்த முதல் அதிகாரத்தை நாம் கற்றுக் கொண்டதிலிருந்து மனதிலே வைத்துக் கொள்ள வேண்டிய சில காரியங்களை நாம் பார்ப்பது நல்லது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் என்ன? முதலாவதாக, தேவன் இங்கு முப்பத்திரண்டு தடவை குறிப்பிடப்பட்டுள்ளார். வேதம் தேவன் இருக்கிறார் என்பதை நிரூபிக்க முயற்சி செய்யவில்லை. ஏன்? அப்படி சொல்லப்பட்டிருக்கிரது?,
உலகத்தில் உள்ள சில மக்களை குறித்து வேதம் இவ்விதமாய் சொல்கிறது. பாருங்கள் சங்கீதம் 14 :1
‘தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான்.
………………………
வேதம் ஆவிக்குறிய வாழ்க்கையையும் , மீட்பின் சத்தியங்களையும் வெளிப்படுத்துவதற்காக எழுதப்பட்ட புத்தகம்,இவை விசுவாசத்தின் மூலமாகவே நமக்கு கிடைக்கிறது. எனவே, தேவனே படைப்பவர் என்ற உண்மை இங்கு சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த முதல் அதிகாரத்தில் நாம் கடவுளின் ஒற்றுமையையும் வல்லமையையும் ஆளுமையையும் பார்க்கிறோம்.
ரோமர் 1:20 என்ன சொல்கிறது?
‘எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க்காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. ‘
…………………………………
அவை எப்படி சுவாரஸ்யமாய்ப் பார்க்கப்படுகின்றன? கவனித்தீர்களா? “படைக்கப்பட்ட காரியங்களாலே தேவனை குறித்த அனைத்தும் அறியப்படுகிறது, அவருடைய நித்தியவல்லமை தேவத்துவம் என்பவைகள் எல்லாம் தெளிவாகக் காணப்படுகிறது. ஆகவே அவர்கள் சமாதானமின்றி இருக்கிறார்கள்.” நான் உங்களிடம் மிகவும் வெளிப்படையாக சொல்கிறேன், கவனியுங்கள்- நீங்கள் தேவன் மேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதை மட்டுமே தேவன் எதிர்பார்க்கிறார்.
இந்த அத்தியாயத்தில் இன்னும் சில சத்தியங்களையும் நாம் கவனிக்க வேண்டும். முதலாவதாக இது பலதெய்வ வழிபாட்டை மறுக்கிறது: ஒரே ஒரு கடவுள் அல்லது தேவன் அனைத்தையும் படைக்கிறார் என்பது தெளிவாய் சொல்லப்பட்டிருக்கிறது. இரண்டாவதாக, உலகத்தில் காணப்படும் பொருட்களின் நித்திய தன்மையை இந்த அதிகாரம் மறுக்கிறது. ஆதியாகமம் முதலாம் அதிகாரம் முதல் வசனம் எப்படி ஆரம்பிக்கிறது, ? ஆதியிலே”— அதாவது எல்லாம் ஒரு ஆரம்பத்தைக் கொண்டிருந்தது, அருமையான சகோதரனே சகோதரியே. அறிவியல் பொருளின் நித்தியத்தை கற்பித்திருந்த காலம் இருந்தபோதிலும், உலகில் காணப்படும் பொருட்கள் எதுவும் நித்தியமானது அல்ல என்ற உண்மையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது மிகவும் உண்மை. மூன்றாவதாக,தேவன் எல்லாவற்றிற்கும் முன்பும் இருக்கிறார் என்றும் – படைக்கப்பட்டவைகளில் இருந்து தனியாகவும் எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டவராகவும் இருக்கிறார். நான்காவதாக, அதிர்ஷ்டம் என்று ஒன்றும் இல்லை —தேவனே தமது சுதந்திர விருப்பத்தின்படி செயல்படுகிறார்.
இறுதியாக, முதல் அத்தியாயத்தில் உள்ள மிக கவர்ச்சிகரமான சில காரியங்களை கூறுகிறேன்: கவனியுங்கள்.இந்த படைப்பின் வரலாற்றில் ஒரு ஒழுங்கையும் – தொடர்ச்சியாக காணப்படும் முன்னேற்றத்தையும் – அனைத்தும் விரைவாக செயல்படுவதையும், மேலும் எல்லாமே பரிபூரணமாய் செய்து முடிக்கப்பட்டதையும் பார்க்கிறோம்.
மேலும் இந்த அதிகாரத்தை நாம் வாசிக்கும் பொழுது சாயங்காலமும் விடியற்காலமும் ஆகி முதலாம் நாள் ஆயிற்று இரண்டாம் நாள் ஆயிற்று என்று வாசிக்கிறோம். எனவே தான் யூதர்களின் வழக்கப்படி ஒரு நாளின் ஆரம்பம் நம்முடைய நாள் கணக்குப்படி முந்திய நாள் மாலை 6 மணிக்கு ஆரம்பம் ஆகிறது . அதாவது மாலை 6:00 மணியோடு ஒரு நாள் முடிவடைகிறது,
ஒவ்வொரு நாளின் படைப்பை முடிக்கும் பொழுதும் அது நல்லது என்று தேவன் கண்டார் என்று வாசிக்கிறோம். தேவன் பொறுப்பற்றவராய் எதையும் படைத்துக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு படைப்பையும் மனிதனுக்காகவே அவர் திட்டமிட்டு, சிறந்ததாக படைத்துக் கொடுத்திருக்கிறார். எனவே இயற்கையை நாம் அழிக்காமல், அதை பாதுகாக்க வேண்டியது அதை கவனமாய் பயன்படுத்த வேண்டியது முக்கியம் என்பதை அறிந்தவர்களை வாழ அழைக்கப்பட்டு இருக்கிறோம்.
அருமையானவர்களே இந்த உலகம் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதை நீங்கள் அப்படியே விசுவாசிக்கிறீர்களா? அவரே சிருஷ்டிகர் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?. இதை விசுவாசிக்கும் பொழுது மட்டுமே பரிசுத்த வேதம் தேவனுடைய வார்த்தைகளால் நிரம்பி உள்ளது என்பதை நீங்கள் விசுவாசிக்க முடியும். அப்படி விசுவாசிக்கும் பொழுது மட்டுமே இந்த வேத வசனங்களின் மூலமாக உண்டாகும் எல்லா ஆசீர்வாதங்களும் பயன்களும் உங்களுக்கு கிடைக்க முடியும் ஒரு வேளை உங்களுக்கு எந்த சந்தேகங்களும் குழப்பங்களும் அறியாமைகளும் இருந்தாலும் அவற்றையெல்லாம் ஓரமாக வைத்துவிட்டு தேவனே நான் உம்மை விசுவாசிக்கிறேன் நான் உமக்கென்று வாழ எனக்கு உதவி செய்யும் என்று கேட்பீர்களா?
கர்த்தர் தாமே உங்களோடு இருந்து, உங்களை இந்த உலகத்தில் படைத்த அவருடைய திட்டத்தை ஒவ்வொரு நாளும் நிறைவேற்ற உங்களுக்கு கிருபை செய்வாராக ஆமென்.
ஆய்வு வழிகாட்டி
ஜே. வெர்னான் மெக்கீயின் குறிப்புகள் & சுருக்கங்கள்
கற்றல் குறிப்புகள்
ஆதியாகமம் — வேதாகமத்தின் விதைநிலம்
எழுதியவர்: மோசே. ஆதியாகமம் (Genesis) என்ற பெயர் செப்டுவஜின்ட் (LXX) என்பதிலிருந்து எடுக்கப்பட்டது, இது கி.மு. 285–247 வாக்கில் தாலமி பிலடெல்பஸின் உத்தரவின் பேரில் அலெக்ஸாண்ட்ரியாவில் உருவாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும். 72 ஆசாரியர்கள் (12 கோத்திரங்களில் ஒவ்வொன்றிலிருந்தும் ஆறு பேர்) இந்த மொழிபெயர்ப்பை 72 நாட்களில் தயாரித்ததாக ஜோசிபஸ் கூறுகிறார். கிறிஸ்துவும் பவுலும் இந்த மொழிபெயர்ப்பிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளனர்.
ஆதியாகமம் என்றால் “ஆரம்பம்,” “மூலம்,” “பிறப்பு” என்று பொருள். கிரேக்க வினைச்சொல்லான gennao — “பெறுதல்” அல்லது “பிரசவித்தல்” என்பதிலிருந்து உருவானது — இது ஆரம்பங்கள் மற்றும் மூலங்களின் புத்தகம், குறிப்பாகப் பிறப்புகளின் புத்தகம். இது வம்சவரலாறுகளின் புத்தகம்: வானம், பூமி மற்றும் மனிதனின் வம்சாவளி. ஆதியாகமம் 3:15-ல் புதிய பிறப்பு கூட உணர்த்தப்படுகிறது, இது ஒரு மீட்பரைப் பற்றிய முதல் குறிப்பைக் கொண்டுள்ளது.
ஆதியாகமம் என்பது ஆரம்பங்களின் புத்தகம்: சிருஷ்டிப்பு, புருஷன், ஸ்திரீ, ஓய்வுநாள், திருமணம், குடும்பம், வேலை, பாவம், கொலை, பலி, இனங்கள், மொழிகள், கலாச்சாரம், நாகரிகம் மற்றும் மீட்பு ஆகியவற்றின் ஆரம்பம். இது இரண்டு இயற்கையான பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது — ஆதியாகமம் 2:4 (வானமும் பூமியும் பிறந்த வரலாறு) மற்றும் ஆதியாகமம் 5:1 (மனுஷருடைய வம்சவரலாறு).
முக்கிய வார்த்தை: வம்சவரலாறுகள். நோக்கம்: நமக்குக் குடும்பங்களைத் தருவது — ஆதியாகமம் 12:3; 22:18; 28:13–14; அப்போஸ்தலர் 3:25; கலாத்தியர் 3:6, 9, 16. முதல் 11 அதிகாரங்கள் குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளை உள்ளடக்கியது; 12-ஆம் அதிகாரம் முதல் 50-ஆம் அதிகாரம் வரை, காலம் வெறும் 350 ஆண்டுகள் மட்டுமே. இந்த வேறுபாடு நமது கவனத்தை ஈர்க்க வேண்டும் — 12-ஆம் அதிகாரத்தில் பதிவு வியத்தகு முறையில் மெதுவாகிறது, ஏனென்றால் உலக நிகழ்வுகளை விட தனிநபர்கள் தேவனுக்கு மிக முக்கியமானவர்களாக மாறுகிறார்கள்.
கருத்து: பிரபஞ்சத்தை விட ஆபிரகாம் தேவனுக்கு முக்கியமானவர். தேவன் ஒரு குடும்பத்தின் 350 ஆண்டுகால வரலாற்றிற்கு 39 அதிகாரங்களை ஒதுக்குகிறார், அதே நேரத்தில் உலக வரலாற்றின் முதல் 2,000+ ஆண்டுகளை வெறும் 11 அதிகாரங்களில் முடிக்கிறார். நான்கு சுவிசேஷங்களிலும், இதே கொள்கை தோன்றுகிறது: நான்கு அதிகாரங்கள் இயேசுவின் வாழ்க்கையின் முதல் 30 ஆண்டுகளை உள்ளடக்கியது, அதே நேரத்தில் 85 அதிகாரங்கள் கடைசி மூன்று ஆண்டுகளையும், 27 அதிகாரங்கள் கடைசி எட்டு நாட்களையும் உள்ளடக்கியது. முக்கியத்துவம் எப்போதும் மிக முக்கியமானவற்றின் மீதே இருக்கிறது — ஆதியாகமத்தில், அது ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத்தின் மூலம் தேவன் வைத்திருக்கும் மீட்பின் திட்டமாகும்.
ஆதியாகமம் மற்றும் பாபிலோனிய விவரம்: சிருஷ்டிப்பின் பாபிலோனிய பலகைகளுடன் ஒப்பிடும்போது வேதாகமப் பதிவின் மேன்மை வெளிப்படுகிறது. பாபிலோனிய பலகைகள் குழப்பத்துடன் தொடங்குகின்றன; வேதாகமம் ஒழுங்கு மற்றும் பரிபூரணத்துடன் தொடங்குகிறது. பாபிலோனிய விவரம் வான உடல்களைத் தெய்வங்களாகக் கருதுகிறது; வேதாகமம் அவற்றை பருப்பொருளாக முன்வைக்கிறது. பாபிலோனிய உரை பலதெய்வக் கொள்கை கொண்டது; ஆதியாகமம் ஒருதெய்வக் கொள்கை கொண்டது. பாபிலோனிய பலகைகள் ஒரு கைவினைஞரின் வேலையைப் பிரதிபலிக்கின்றன; ஆதியாகமத்தில், தேவன் வார்த்தை சொன்னார். பாபிலோனிய விவரம் சிறுபிள்ளைத்தனமான மற்றும் விகாரமான தன்மையைக் கொண்டுள்ளது; வேதாகமம் ஒரு பரிசுத்த சிருஷ்டிகரும் இரட்சகருமானவரின் மகத்தான மற்றும் புனிதமான உண்மைகளை முன்வைக்கிறது. பாபிலோனிய விவரம் அறிவியலோடு ஒத்துப்போகவில்லை என்றாலும், ஆதியாகமப் பதிவு அறிவியலோடு ஒத்துப்போகிறது — இதனால் பல விஞ்ஞானிகள் விசுவாசிகளாக உள்ளனர்.
சுருக்கம்
I. பூமியில் பாவம் நுழைதல் (அதிகாரங்கள் 1–11)
-
A. சிருஷ்டிப்பு, அதிகாரங்கள் 1–2
- வானமும் பூமியும், 1:1 — “சிருஷ்டித்தார்” (bara) 3 முறை மட்டுமே வருகிறது (வச. 1, 21, 27)
- பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது, 1:2
- மறு-சிருஷ்டிப்பு, 1:3–2:25
- a. முதல் நாள் — வெளிச்சம், 1:3-5
- b. இரண்டாம் நாள் — ஆகாய விரிவு, 1:6-8
- c. மூன்றாம் நாள் — வெட்டாந்தரை காணப்படுதல் மற்றும் தாவரங்கள், 1:9-13
- d. நான்காம் நாள் — சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் தோன்றுதல், 1:14-19
- e. ஐந்தாம் நாள் — ஜீவஜந்துக்கள் (உயிரியல்), 1:20-23
- f. ஆறாம் நாள் — சிருஷ்டிப்பின் செழிப்பு மற்றும் மனிதனின் சிருஷ்டிப்பு, 1:24-31
- g. ஏழாம் நாள் — ஓய்வுநாள், 2:1-3
- h. மனிதனின் சிருஷ்டிப்பு பற்றிய சுருக்கம், 2:4-25 (மீள்நிகழ்வு விதி)
-
B. வீழ்ச்சி, அதிகாரங்கள் 3–4
- பாவத்தின் வேர் — தேவனைச் சந்தேகிப்பதும் கீழ்ப்படியாமையும்
- பாவத்தின் கனி — “இருதயத்திலிருந்து… கொலைகளும்… புறப்பட்டுவரும்” (மத். 15:19)
-
C. ஜலப்பிரளயம், அதிகாரங்கள் 5–9
- ஆதாமின் வம்சவரலாறு — சேத்தின் வழியாக — மனித வரலாற்றின் ஆரம்பம் — மரண அறிவிப்புகள், அதி. 5
- ஜலப்பிரளயத்திற்கு முந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்கான காரணம் மற்றும் பேழையின் கட்டுமானம், அதி. 6
- ஜலப்பிரளயத்தின் நியாயத்தீர்ப்பு, அதி. 7
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய நாகரிகம் — ஜலப்பிரளயத்திற்குப் பிறகு, அதி. 8
- ஜலப்பிரளயத்திற்குப் பிந்தைய வாழ்க்கை — புதிய ஆரம்பம், அதி. 9
-
D. பாபேல் கோபுரம் மற்றும் பாஷைகள் தாறுமாறாக்கப்படுதல், அதிகாரங்கள் 10–11
- இனவியல் — நோவாவின் குமாரர்கள், அதி. 10 10
- பாபேல் கோபுரம், அதி. 11 (பெந்தெகொஸ்தே நாளுக்கு முரணானது)
-
பாடச்சுருக்கம் (வம்சவரலாறுகளின்படி):
- ஆதி. 1:1–2:6 — வானமும் பூமியும் பிறந்த வரலாறு — சிருஷ்டிப்பின் தெய்வீகக் கவிதை — தேவனுடைய சிருஷ்டிப்பு வேலை
- ஆதி. 2:7–6:8 — ஆதாமின் வம்சவரலாறு (மனுஷர், anthropoi) — ஆதாம் சிருஷ்டிக்கப்பட்டார், ஆனால் அவருக்குப் பிள்ளைகள் பிறந்தார்கள்
- ஆதி. 6:9–9:29 — நோவாவின் வம்சவரலாறு
- ஆதி. 10:1–11:9 — நோவாவின் குமாரர்களுடைய வம்சவரலாறுகள்
- ஆதி. 11:10-26 — சேமுடைய குமாரர்களுடைய வம்சவரலாறுகள் (புறஜாதிகள்)
- ஆதி. 11:27–25:11 — தேராகின் வம்சவரலாறு
- ஆதி. 25:12-18 — இஸ்மவேலின் வம்சவரலாறு
- ஆதி. 25:19–35:29 — ஈசாக்கின் வம்சவரலாறு (“ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்” — ஆதி. 21:12; எபி. 11:8-9; ரோம. 9:7)
- ஆதி. 36:1–37:1 — ஏசாவின் வம்சவரலாறு
- ஆதி. 37:2–50:26 — யாக்கோபின் வம்சவரலாறு (நிராகரிக்கப்பட்ட வம்சம் முதலில் கொடுக்கப்பட்டுள்ளது, தேர்ந்தெடுக்கப்பட்ட வம்சம் கடைசியாக — ஒப்பிடுக: 1 கொரி. 15:46)
II. அனைத்து மனிதகுலத்திற்கும் மீட்பர் வருவதற்கான ஆயத்தம் (அதிகாரங்கள் 12–50)
-
A. ஆபிரகாம் (விசுவாசம்), அதிகாரங்கள் 12–23
(தேவன் ஏழு முறை தரிசனமானதன் மூலம் விசுவாசத்தின் வளர்ச்சி)
- ஆபிராமுக்கு தேவனுடைய அழைப்பும் வாக்குத்தத்தமும் — விசுவாசக் குறைவினால் அவரது பதில், அதி. 12 12
- ஆபிராம் எகிப்திலிருந்து தேசத்திற்குத் திரும்புகிறார் — லோத்தை விட்டுப் பிரிகிறார் — தேவன் மூன்றாவது முறையாக ஆபிராமுக்குத் தரிசனமாகிறார், அதி. 13 13
- முதல் போர் — ஆபிராம் லோத்தை விடுவிக்கிறார்; முதல் ஆசாரியர் — மெல்கிசேதேக்கினால் ஆபிராம் ஆசீர்வதிக்கப்படுகிறார், அதி. 14 14
- தேவன் ஆபிராமுக்குத் தம்மை முழுமையாக வெளிப்படுத்துகிறார் — தமது வாக்குத்தத்தங்களை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 15 15
- சாராய் மற்றும் ஆபிராமின் அவிசுவாசம் — இஸ்மவேலின் பிறப்பு, அதி. 16 16
- தேவன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்கிறார் (ஆபிராம் ஆபிரகாம் ஆகிறார்) — ஒரு குமாரனைப் பற்றிய வாக்குத்தத்தத்தை உறுதிப்படுத்துகிறார், அதி. 17 17
- சோதோமின் வரவிருக்கும் அழிவை தேவன் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகிறார் — ஆபிராம் பரிந்து பேசுகிறார், அதி. 18 18
- தேவதூதர்கள் லோத்தை எச்சரிக்கிறார்கள் — லோத்து சோதோமை விட்டு வெளியேறுகிறார் — தேவன் சமவெளிப் பட்டணங்களை அழிக்கிறார், அதி. 19 19
- சாராளுடனான உறவைப் பற்றி ஆபிரகாம் கெராரில் பாவத்தைத் திரும்பச் செய்கிறார், அதி. 20 20
- ஈசாக்கின் பிறப்பு — ஆகாரும் இஸ்மவேலும் துரத்தப்படுகிறார்கள் — பெயெர்செபாவில் ஆபிரகாம், அதி. 21 21
- ஈசாக்கைப் பலியிட தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிடுகிறார் — அவரைத் தடுக்கிறார் — உடன்படிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறார், அதி. 22 22
- சாராளின் மரணம் — அடக்கம் செய்வதற்காக ஆபிரகாம் மக்பேலா குகையை விலைக்கு வாங்குகிறார், அதி. 23 23
-
B. ஈசாக்கு (அன்பான குமாரன்), அதிகாரங்கள் 24–26
(மணமகளைத் தேர்ந்தெடுப்பது கிறிஸ்துவையும் சபையையும் ஒப்பிடுகிறது)
- ஈசாக்கிற்கு மணமகளை அழைத்து வர ஆபிரகாம் ஊழியக்காரனை அனுப்புகிறார் — ரெபெக்காள் திரும்புகிறார் — ஈசாக்கின் மணமகளாகிறார், அதி. 24 24
- ஆபிரகாமின் மரணம் — ஏசா மற்றும் யாக்கோபு (இரட்டையர்கள்) பிறப்பு — ஏசா சேஷ்டபுத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறார், அதி. 25 25
- தேவன் ஈசாக்கிடம் உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார் — ரெபெக்காளுடனான உறவை ஈசாக்கு தவறாகக் கூறுகிறார் — ஈசாக்கு கெராரில் கிணறு வெட்டுகிறார், அதி. 26 26
-
C. யாக்கோபு (“கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் தண்டிக்கிறார்”), அதிகாரங்கள் 27–36
- ஏசாவுக்குக் கிடைக்க வேண்டிய ஆசீர்வாதத்தைப் பெற யாக்கோபும் ரெபெக்காளும் சூழ்ச்சி செய்கிறார்கள், அதி. 27 27
- யாக்கோபு வீட்டை விட்டு வெளியேறுகிறார் — பெத்தேலில் தேவன் அவருக்குத் தரிசனமாகிறார் — ஆபிரகாமிய உடன்படிக்கையை உறுதிப்படுத்துகிறார், அதி. 28 28
- யாக்கோபு ஆரானுக்கு வருகிறார் — ராகேலையும் மாமா லாபானையும் சந்திக்கிறார் — ராகேலுக்காக வேலை செய்கிறார் — லேயாளைத் திருமணம் செய்ய ஏமாற்றப்படுகிறார், அதி. 29 29
- யாக்கோபின் குமாரர்களின் பிறப்பு — யாக்கோபு லாபானை விட்டு வெளியேறத் தயாராகிறார் — யாக்கோபின் ஒப்பந்தம் பலன் தருகிறது, அதி. 30 30
- யாக்கோபு ஆரானிலிருந்து தப்பி ஓடுகிறார் — லாபான் அவரைப் பிடிக்கிறார் — யாக்கோபும் லாபானும் மிஸ்பா உடன்படிக்கை செய்கிறார்கள், அதி. 31 31
- யாக்கோபின் வாழ்க்கையில் நெருக்கடி: பெனியேலில் ஒரு புருஷன் அவருடன் போராடுகிறார் — யாக்கோபின் பெயர் இஸ்ரவேல் என்று மாற்றப்படுகிறது, அதி. 32 32
- யாக்கோபு ஏசாவைச் சந்திக்கிறார் — யாக்கோபு சாலேமுக்குப் பயணம் செய்கிறார், அதி. 33 33
- யாக்கோபின் குடும்பத்தில் அவமானம்: தீனாள் தீட்டுப்படுத்தப்படுகிறாள் — ஏமோரின் மனுஷர்களைக் கொன்று சகோதரர்கள் பழிவாங்குகிறார்கள், அதி. 34 34
- யாக்கோபு பெத்தேலுக்குத் திரும்புகிறார் — பெத்லகேமில் ராகேல் மரிக்கிறாள் — எப்ரோனில் ஈசாக்கு மரிக்கிறார், அதி. 35 35
- ஏதோமின் தேசமாக மாறும் ஏசாவின் குடும்பம், அதி. 36 36
-
D. யோசேப்பு (பாடுகளும் மகிமையும்), அதிகாரங்கள் 37–50
- யாக்கோபு கானானில் குடியிருக்கிறார் — யோசேப்பு அடிமையாக விற்கப்படுகிறார், அதி. 37 37
- யூதாவின் பாவமும் அவமானமும், அதி. 38 38
-
எகிப்தில் சிறுமைப்படுத்தப்படுதல், அதி. 39–40
- போத்திபாரின் வீட்டில் விசாரணைக்காரன் — போத்திபாரின் மனைவியால் சோதிக்கப்பட்டு பின்னர் பழி சுமத்தப்படுகிறார் — சிறையில் அடைக்கப்படுகிறார், அதி. 39 39
- சிறையிலிருந்த யோசேப்பு சுயம்பாகியினதும் பானபாத்திரக்காரனதும் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார், அதி. 40 40
-
எகிப்தில் உயர்த்தப்படுதல், அதி. 41–48
- யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லுகிறார் — எகிப்தின் அதிகாரியாக்கப்படுகிறார் — ஆஸ்நாத்தைத் திருமணம் செய்கிறார் — மனாசே மற்றும் எப்பிராயீமின் பிறப்பு, அதி. 41 41
- யாக்கோபு தானியத்திற்காகத் தன் பத்து குமாரர்களை எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்புடன் சந்திப்பு — சிமியோனைப் பிணையாக விட்டுச் செல்கிறார்கள் — தானியத்துடனும் திருப்பிக் கொடுக்கப்பட்ட பணத்துடனும் வீடு திரும்புகிறார்கள், அதி. 42 42
- யாக்கோபு மீண்டும் தன் குமாரர்களை (பென்யமீன் உட்பட) எகிப்திற்கு அனுப்புகிறார் — யோசேப்பின் வீட்டில் விருந்து உபசரிக்கப்படுகிறார்கள் (அவர் தன் அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை), அதி. 43 43
- யோசேப்பு சகோதரர்களை வீட்டிற்கு அனுப்புகிறார் — விசாரணைக்காரனால் கைது செய்யப்படுகிறார்கள் — பென்யமீனின் சாக்கில் கிண்ணம் கண்டெடுக்கப்படுகிறது — யூதா பென்யமீனுக்காகப் பரிந்து பேசுகிறார், அதி. 44 44
- யோசேப்பு தன் அடையாளத்தை வெளிப்படுத்துகிறார் — சகோதரர்களுடன் உருக்கமான சந்திப்பு — யாக்கோபையும் குடும்பத்தினர் அனைவரையும் எகிப்திற்கு அழைக்கிறார், அதி. 45 45
- யாக்கோபு தன் குடும்பத்துடன் (70 பேர்) எகிப்திற்குச் செல்கிறார் — யாக்கோபும் யோசேப்பும் மீண்டும் இணைகிறார்கள், அதி. 46 46
- யாக்கோபும் சகோதரர்களும் கோசேன் நாட்டில் குடியிருக்கிறார்கள் — பார்வோனிடம் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள் — பஞ்சம் எகிப்தியர்களை நிலத்தை விற்க நிர்ப்பந்திக்கிறது — யாக்கோபைக் கானானில் அடக்கம் செய்வதாக யோசேப்பு ஆணையிடுகிறார், அதி. 47 47
- யாக்கோபு மரணப்படுக்கையில் யோசேப்பின் குமாரர்களை ஆசீர்வதிக்கிறார், அதி. 48 48
-
யாக்கோபு மற்றும் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 49–50
- யாக்கோபு மரணப்படுக்கையில் 12 குமாரர்களுக்கும் ஆசீர்வாதத்தையும் தீர்க்கதரிசனத்தையும் வழங்குகிறார், அதி. 49 49
- கானானில் யாக்கோபின் மரணமும் அடக்கமும் — எகிப்தில் யோசேப்பின் மரணமும் அடக்கமும், அதி. 50 50
SE துணைப் பணிப் புத்தகம்
இன்றைய பகுதியிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியக் கருத்தை எழுதுங்கள்.
பகுதியிலிருந்து முக்கிய உண்மைகள், திரும்பத் திரும்ப வரும் சொற்கள் மற்றும் விவரங்களைப் பதிவு செய்யுங்கள்.
